Pammal Sambandha Mudaliar
ஒருவன் தான் படும் கஷ்டங்களைத் தன் நண்பர்களுக்கு வாய் விட்டுத் தெரிவித்தால், அவைகளின் துயரம் பாதி ஆறுவான், என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு புதிய நாடகம் ரேடியோவிற்காக எழுதிக் கொடுப்பதாக ஒரு நண்பரிடம் வாக்கு கொடுத்தேன். அது முதல், தினம் அவர் அது பூர்த்தியாகி விட்டதா ? என்று கேட்க ஆரம்பித்தார். நான்கைந்து நாட்களாக, என் மூளையை நான் எவ்வளவு தான் கலக்கிய போதிலும், புதிய விஷயம் ஒன்றும் தோன்றவில்லை. என் புத்திக்கு! இன்று காலை எழுந்த பொழுது திடீரென்று ஒரு அற்புதமான விஷயம் என் புத்தியிற் பட்டது. அதை ஒரு சிறு நாடகமாக எழுதலாமென்று, ஆவலுடன், என் காலைக் கடனை விரைவில் முடித்துக் கொண்டு எழுத உட்கார்ந்தேன்.- என் வழக்கப்படி காகிதங்களை ஒழுங்காய் அடுக்கிக்கொண்டு -- என் பென்சிலை சீவிக்கொண்டு - பிள்ளையார் சுழி போட்டவுடன்--டக் டக் ! என்று ஒரு பெரிய சப்தம் என் காதில் விழுந்தது. இது என்னடா என்று நான் எழுந்து ஜன்னல் வழியாக வீதியில் பார்த்தால், என் கண் எல்லாம் புகையினால் சூழப்பட் டது. என் வீட்டிற் கெதிராக ஒரு முனிசிபல் ஸ்டீம் ரோலர் (Steam roller) வர ஆரம்பித்தது! உடனே என் அறையெல்லாம் புகை நிரம்பிவிட்டது. அந்த ஸ்டீம் ரோலர் என் வீட்டிற்கப்புறம் கொஞ்சம் தூரம் போகிற வரையில் என் கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டிருந்தேன். பிறகு அப்புகையும் நீங்கி சப்தமும் குறைந்த பிறகு, என்னடா இது, பிள்ளையார் சுழி போட்டவுடன் இந்தத் தடை வந்ததே என்று கலங்கினவனாய், ஒருவாறு மனதைத் திடப்படுத்திக் கொண்டு, மறுபடியும் பென்சிலைக் கையிலெடுத்தேன்.